Saturday, February 16, 2013

அம்முகுட்டிக்கு PART #14



விபத்துக்கள் ..!!
மறுபடியும் சிரித்துக்கொண்டு
சாலையோரம் நடக்காதேடி,
ஏற்கனவே நடந்த விபத்துக்களுக்கெல்லாம்
நீதான் காரணம் என்று தேடிக்கொண்டு இருக்கிறார்களாம் !


பூ வலி ..!!
பேனாவை அழுத்தமாய் பிடித்து எழுதாதேடி
உனக்கு வலிக்கும் என்று ரத்தகண்ணீர் விட்டு
சிவப்பாய் எழுதுகிறது பார் !!
நீலமை ஊற்றியும் கூட


பூ வலி - 2 ..!!
ஒருமுறை அடிக்க வந்தார் அம்மா
ஆவேசம் வந்துவிட்டது எனக்கு, பயந்து போனார்.
என்னை நீ அறைந்தேவிட்டாய்
பதறி போய்விட்டேன்
"கை வலிக்கபோகுதடி !!"

  சொத்துவரி ..!!
உன் அப்பாவிடம் சொல்லடி
அரசாங்கத்தை ஏமாற்றவேண்டாம் என்று
பின்னே,
உன்னை வீட்டில் வைத்துக்கொண்டு
"சொத்துவரி" கட்டுவதே இல்லையாமே !


உயிர்ப்பு ..!!
அணைத்து அணைத்து வைத்தாலும்
அதுவாக உயிர் பெறுகிறது
என் அலைபேசி
நீ அழைக்கும் போது...!

அம்முகுட்டிக்கு PART #13



திணை ..!!
தமிழ் இலக்கணம் சொல்கிறது
மணலும் மணல் சேர்ந்த இடமும் - பாலை
நான் சொல்கிறேன்
அவளும் அவள் சேர்ந்த இடமும் - சோலை



இனிப்பு பாகற்காய் ..!!
"அம்மு வீட்டு பாகற்காய் இனிக்கிறது"
ஊரெல்லாம் ஒரே பேச்சு.
எனக்குத்தானே தெரியும் ஏனென்று
நீ தொட்டுத்தொட்டு பறிக்கிராயே
அங்கு வந்ததடி இனிப்பு அதற்கு !


ஒளிவட்டம் ..!!
ஒருமுறை வானத்தில் பறக்கும்போது
உன்வீட்டை கண்டுகொண்டேன்
அதை சுற்றி இருக்கும்
ஒளிவட்டத்தை வைத்து !


குழப்பம் வரும் ..!!
கோவிலுக்கு போ, ஆனால்
வெளியில் நின்று வேண்டிவிட்டு வந்துவிடு
உள்ளே போகாதே.
எந்த சிலைக்கு தீபம் காட்டுவது என்று
குழப்பம் வரும் ஐயருக்கு

அம்முகுட்டிக்கு PART #12



சொல்லிவை ..!!
உன் நினைவுகளுக்கு சொல்லிவையடி
நாய்க்குட்டி போல் என்னையே
சுற்றி சுற்றி வருகிறது,
கொஞ்சம் ஏமார்ந்தாலும் கூட
முகத்தை நக்கிவிட்டு ஓடிவிடுகிறது !!


மாற்றம் ..!!
நண்பர்களாக இருந்தோம்,
அப்போது சொன்னாய்,
"அப்பாவும் அம்மாவும் வீட்டிற்கு தெரியாமல்
திருமணம் செய்து கொண்டார்கள்
நானாவது அப்படி கூடாது".
காதல் வந்த பிறகு கேட்கிறாய்
"அவர்கள் செய்தால் சரி,
நாம் செய்தால் தவறா?"


வாசம் ..!!
ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு
வாசம் உண்டடி என்றேன்.
என் கணவனின் அறிவே அறிவு என்றாய்.
திடீரெண்டு கோபப்பட்டு
அதெப்படி உங்களுக்கு தெரியும் என்கிறாயே
எப்படி விளக்குவது உனக்கு
எல்லா பூவுக்கும் வாசம் உண்டென்பதை.

அம்முகுட்டிக்கு PART #11



பாவம் ..!!
காரத்தின் மீது தீராத காதல் எனக்கு
"கடுகு காரத்திற்கே கண்ணீர் விடுவேன்"
என்கிறாய் நீ
இன்றோடு தொலைத்தேன்போ காரத்தை
அடி அம்முக்குட்டி,
புலி புல்லைத்தின்பது பாவமல்லடி
அணில் அசைவம் தின்பதுதான் பாவம்.


தன்மானம் துறப்பு ..!!
காக்கைக்கு சோறு வைக்காதே என்றேன் கேட்டாயா,
இப்போது பாரடி,
குயில்கள் கூட தன்மானம் துறந்து
"கா...கா.." என்று கரைவதை
நீ வைக்கும் சோற்றுக்காக ..!!


கொஞ்சம் சொல்லேன் ..!!
வீட்டிற்கு போனால் அம்மா கேட்பாள்
"இத்தனை வருஷமாய் கூடவே இருந்ததை
மறந்து தொலைத்துவிட்டாயே" என்று.
உன்னோடு பேசிக்கொண்டே இருந்ததில்
என்பெயர் மறந்து போனதடி
கொஞ்சம் சொல்லேன்.

அம்முகுட்டிக்கு PART #10



தீர்த்தம்..!!
காசி கடக்கும் கங்கை நீரையோ,
ராமேஸ்வரம்சூழ் கடல் நீரையோ
அல்லது
அவள் குடித்துவைத்த மீதநீரையோ
கொண்டு செய்யப்படுகிறது ..!!


முறையீடு ..!!
கொஞ்சும் பார்வையை வீசு
பற்றி எரியட்டும் - இந்த பச்சைமரம்.
கொஞ்சம் அழகைகாட்டு
அடங்கிபோகட்டும் - இந்த ஆவேச அலை.
காதலனாகினாய்,
உன் கனவுகளுக்கு காவலனாகினாய்,
கவிஞன் ஆக்கினாய்,
கணவனாகத்தான் வாய்க்கவில்லை
கல்லறையாகவாவது விடேன்.


கொலுசுகளையாவது கொடு ..!!
உறங்க நேரமாகிவிட்டது ஆனாலும்
நாளை சீக்கிரம் எழவேண்டும்,
காலைவரை கனவுகளை கொடு
இல்லையானால் கால் கொலுசுகளையாவது கொடு
எழுப்பிவிடட்டும் என்னை - நான் உறங்கினால்

அம்முகுட்டிக்கு PART #9



அச்சச்சோ ..!!
நமக்கு பிறக்கும்
இரண்டாவது பெண் குழந்தைக்கு
என் அம்மா பெயரையும்,
மூன்றாவது பெண் குழந்தைக்கு
உன் அம்மா பெயரையும் வைக்கலாம் என்றேன்
"அச்சச்சோ...." என்றாய்
கண்ணம் சிவக்க வெட்கப்பட்டு
அன்று புரிந்ததடி எனக்கு
இந்த பெண்கள் சொல்லும் "அச்சச்சோ"வின் அர்த்தம்!


சாபம் ..!!
கடிக்கிற சாக்கில்
உன்கன்னதில் முத்தமிடும்
அந்த கொசு இனமே
இன்றோடு அழிந்து போகட்டும்.
வயிற்றெரிச்சலில் சாபமிடுகிறேன் நான் !!


பெயர் ..!!
"காதல்கதை கொண்ட படத்திற்கு
பெயர் ஒன்று சொல்லு" என்றார்கள்
உன்பெயர் சொன்னேன்.
"அடிதடி சண்டை படத்திற்கு
பெயர் ஒன்று சொல்லு" என்றார்கள்
வேறென்ன ?
உன் அப்பா பெயர்தான் !!

அம்முகுட்டிக்கு PART #8



கூட்டத்தை பார் ..!!
சூரியன் உதிக்கும்போது - வெளிய
நிற்காதேன்னு எத்தனமுறை சொல்வது
சூரிய உதயத்தையும் நிலவையும்
ஒன்றாகப்பார்க்க கூட்டத்தைப்பார் வாசலில் ..!!


வரமும் சாபமும் ..!!
எனக்கு போட்டியாக - உன்
காதருகே சிரிக்கும் மச்சத்தை
மிச்சமில்லாமல் தின்று விடட்டுமா?
நித்தம் நித்தம் சத்தமாக
முத்தமிட்டு மொத்தமாக செத்துவிடட்டுமா !!
துப்பட்டா மடிப்பில் தொலைவதற்கு வரம்கொடு
அல்லது,
கன்னக்குழியில் கரைவதற்கேனும் சாபமிடு


உதயம் ..!!
சூரியன் உதிக்கும் திசை
தெற்கு !
அந்த திசையில்தானே
உன்வீட்டு வாசல் இருக்கிறது !!

 மாடல் ..!!
சிற்பம் செய்யும் நண்பரை கேட்டேன்
"என்ன செய்கிறீர்கள்?"
சொன்னார்,
"மனைவியை மாடலாக வைத்து
மகாலட்சுமி சிலை செய்கிறேன்"
கேட்டார்,
"நீங்கள் என்ன செய்கிறீர்கள்?"
சொன்னேன்,
மகாலட்சுமியையே மாடலாக வைத்து
மனைவியை தேடிக்கொண்டு இருக்கிறேன் ..!!


நினைத்த போதெல்லாம் ..!!
மொட்டை மாடியில் உறங்கும்போது
"கண்ணை கூசுகிறதே இதை யாராவது
ஊதி அணைத்து விடுங்களேன் " என்று
நிலவை பார்த்து சொன்னாயாமே !
அது என்ன என் அம்முவா ?
நினைத்த போதெல்லாம் அணைக்க !


திருந்தட்டும் சிலைகள் !!
ஒரு முறை கோவில் பக்கம் வா
திருந்தட்டும் அந்த கர்வம் பிடித்த சிலைகள்!!

Friday, February 15, 2013

ஆசிரியர் சமூகத்திற்கு .....


ஆக்கப்படவோ அழிகப்படவோ எந்த தருணத்திலும் அனுமதிக்காமல் ஒன்றுலிருந்து மற்றொன்றாக ஆகும் அல்லது ஆக்கும் அனுமதியை மட்டுமே தரும் ‘ஆற்றலை’போல உங்கள் கற்பித்தல் ஆற்றலானது இந்த சமுதாயத்தை புரட்டிபோடும் நெம்புகோலாகட்டும், சமதர்ம சமுதாயத்தை கட்டியெழுப்பும் ஒரு கல்வி புரட்சியாளானாக, பழமைக்கு எதிராக அறிவாயுதம் ஏந்தி அஞ்சாது போர்புரியும் ஒரு போர்வீரனாக மாணவர்களை மாற்றட்டும். பழைய கதைகளையும் கற்பனைகளையும் நங்கூரம் பாய்ச்சி இதற்குமேல் நகராமல் கட்டட்டும்.



மதிப்பெண்களை மனதில் வைத்து புத்தகத்தை மனனம் செய்யும் உயிரற்ற ஒரு பதிவு கருவியாக இல்லாமல், புத்தக கருத்துகளை உயிர் நீராய் பருகசெய்து தானே சிந்திக்கும் ஆற்றல் படைத்த ஒரு அசைக்க முடியாத ஒப்பற்ற ஆலவிருட்சமாய் எதிர்கால என் தமிழ் சந்ததியை மாற்றுங்கள் என நானும், எனக்குள்ளும் கல்வியிணூடாக ஒரு ஆளுமையை ஏற்படுத்தி தந்த அற்புத ஆசியர்களை நினைவில் வைத்து உங்களின் பாதங்களில் மன்றாடுகிறேன்.

அவனுக்கு மதிப்பெண் மீனை பிடித்து தரவேண்டிய அவசியம் இல்லையாதலால் கல்வி வலையை வைத்து சிந்தனை மீன்களை தானே பிடிக்க கற்று கொடுத்தால் மட்டுமே ஆசிரியராக வெற்றியடைந்தவராவீர்கள்.



உயிரை கூட்டி உரக்க கத்தினாலும் அறையை விட்டு வெளியே வராத குரலைகொண்ட ஆசிரியரல்லாத எனக்கு, மெல்லிய குரலிணூடாகவே ஒரு இளம் சமுதாயத்துடன், ஒரு புது தலைமுறையுடன் அசாதாரணமாக உரையாடும் ஆசியர்கள்மீது வெளிகாட்டிக்கொள்ளப்படாத பொறாமை எப்போதுமே உள்ளது. என்னால் இழுக்க முடியாத ஒரு தேரினை கட்டியிழுக்கும் சர்வவல்லமை படைத்த ஒரு சக மனிதன் நிச்சயமாக ஒரு ஆசிரியராகதான் இருக்கவேண்டும்.

கட்டி எழுப்பவேண்டிய தன்னம்பிக்கையும், துணிவும், அறிவாற்றலும், சுயசிந்தனையும் பகுத்தறிவும் மிக்க நமது சமுதாயத்தை கருத்தில் கொள்ளாமல் நாள்தோறும் புதுப்புது சீரழிவுகளால் பாழ்பட்டு பழைய இரும்புகளாய் துருபிடித்து கிடக்கும் நமது இளைய தலைமுறையை தங்களது கல்வியுணூடாக துருநீக்கி, சீர்படுத்தி பதம்செய்து எத்தகைய வைரம்பாய்ந்த மடமை மரத்தையும், சுய சிந்தனை பாதையை அடைத்துநிற்கும் மூடப்பாறைகளையும் அசராது வெட்டிச்சாய்க்கும் அறிவுக் கோடரிகளாக மாற்றவேண்டிய கொல்லனின் பொறுப்பு உங்களுக்கு.

இரும்பை இரும்பாகவே தருவது கொல்லனின் அழகல்ல, அதை உழைப்பு சுத்தியல் துணையுடன் அரி(அறிவு)வாளாக மாற்றித்தாருங்கள், நீங்களும் வாருங்கள் கூடி சமுதாயத்தில் வெற்றிக்கதிரருப்போம்...



கரும்பலகையில் மாவால் எழுதுவது வெறும் எழுத்தல்ல, அது இருளடைந்த ஒரு சமுகத்தின் கரியசாலையில் நீங்கள் வரையும் மாக்கோலம், இருட்டை நீக்க நீங்கள் ஏற்றும் மாவிளக்கு என்பது பெருமிதம்கொள்ளவைக்கிறது.

ஆசிரியர் என்பது தொழில் அல்ல ஒரு பொறுப்பு மிக்க, கண்ணியம் மிக்க, முன்மாதிரியாக வாழ்ந்து காட்டவேண்டிய கடமையுள்ள பதவி. தலைகுனிந்து நின்ற ஆசிரியர்களை நான் என்றுமே கண்டதில்லை. சூரிய ஆசிரியரினுடாகவே, சுழலும் மாணவ பூமி நாள்தோறும் தன்னை புதுப்பித்துக்கொண்டு துள்ளலோடு சுற்றிவருகிறது. அவர்களின் வழியாகவே வரலாறும் தன்னைத்தானே எழுதிக்கொள்கிறது. ஆசிரிய மறைவின்போது மட்டும் வரலாறும் ஒரு நொடி நின்று மௌனம் சொல்லிவிட்டு முன்னகர்கிறது.

மாணவனின் வாழ்கையில் தானும் ஒரு அங்கமாகி, அவனுக்கு அறிவுதந்து, பாதைகாட்டி அவனுடன் சண்டையிட்டு, அன்பை பகிர்ந்து, தன்னை கடந்து முன்னகரும் அவனை பெருமையுடன் பார்த்து, அவனுக்கு அனுபவத்தை தந்து முதுமையாக்கி தான்மட்டும் என்றும் இளமையாகவே உணர்ந்து இளமையாகவே மறைந்து போகும் வரம் இந்த "ஆசிரியம்".


                                                  வரம்பெற்ற நீங்கள்  
                                                                   சரியாக பயன்படுத்துவீர்கள் என்ற
                                                                   நம்பிக்கையுடனும்,
                                                                   வாழ்த்துகளுடனும்....

                                                                   சக்திவேல் லோகநாதன்